‛‛திக்குமுக்காடும் திருவனந்தபுரம்’’.. இரவில் கொட்டிய கனமழையால் திடீர் வெள்ளம்.. மக்கள் பெரும் அவதி
திருவனந்தபுரம்: தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி உள்ளதால் தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் மீட்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அக்டோபர் 18ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அதன்படி நேற்று முதல் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இதற்கிடையே தான் அக்டோபர் 17ல் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இது வடகிழக்கு பருவமழைக்கான தொடக்க காலமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள கேரளா தலைநகரான திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தம்பனூர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியது. பொதுமக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்கின்றனர். இதுதவிர பல சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கனமழையின் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் சென்றது. அதோடு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் வீடுகளில் நுழைந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீகாரியத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இன்னும் சிலர் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதோடு தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளி கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி கனமழையின் காரணாக பல இடங்களில் மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளன. மழை காலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கும் வகையில் கேரளா மின்வாரியம் சார்பில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருவனந்தபுரத்தில் கடலில் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேரளா அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications