சென்னையை தாக்குமா சென்யார் புயல்? டெல்டா வெதர்மேன் கணிப்பு!
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்து உருவாகவிருக்கும் சென்யார் புயல் தமிழக கடற்கரையைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நவம்பர் மாத இறுதியில் வங்கக் கடலில் 'சென்யார்' என்ற புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளது. சென்யார் என்ற புயலின் பெயர் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை நிலவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் ஹேமச்சந்திரன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நவம்பர் இறுதி வாரத்தில் உருவாகவிருக்கும் சென்யார் புயல் தமிழக கடற்கரையைத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த அமைப்பு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. சென்யார் புயலின் தீவிரம், கரையைக் கடக்கும் இடம் ஆகியவற்றை, தற்போது துல்லியமாக கணிக்க முடியாது.
தற்போது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை மீது கவனம் செலுத்துகிறோம். இது அடுத்த 2- 3 நாள்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும்.
வரும் நவ. 22- 23 ஆம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகிறதா என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நாளை முதல் அடுத்த 3- 4 நாள்களுக்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை உள்பட வடதமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications