சென்னை உட்பட 3 மாவட்டங்களில்.. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு லீவ்! வெளியானது முக்கிய அறிவிப்பு
சென்னை: புயல் கனமழை காரணமாக சென்னையில் சில இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் இன்னமும் வடியாமல் இருக்கிறது. எனவே சென்னை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை ஒட்டி ஆந்திரா பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னைக்கு வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியது.

மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.
கணேசபுரம் சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை, சி.பி. சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, சூளைமேடு லயோலா சுரங்கப்பாதை, கதிர்வேடு சுரங்கப்பாதை என சென்னை முழுவதும் 11 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருந்ததால் நேற்று இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.
இன்று ஒரு சில சுரங்கப்பாதைகள் தவிர மற்ற அனைத்திலும் மழைநீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. எனவே அந்த பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. புறநகர் ரயில் சேவையை பொறுத்த அளவில், நேற்று வரை சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னையில் எழும்பூரில் இருந்து மட்டுமே புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வந்தடைந்தது.
இந்நிலையில் நாளை (டிச.8) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்படுவதாலும், மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாததாலும் தொடர்ந்து 5வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications