வடகிழக்கு பருவமழை எந்த அளவு பெய்யும்? சென்னையில் இந்த ஆண்டும் சம்பவம் உண்டா.. ரமணன் சொல்வது இதுதான்
சென்னை: வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டில் வட தமிழகத்தில் இயல்பை விட மழை சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன், பருவழை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை விலகியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மறக்க முடியாத பாதிப்பினை கனமழை ஏற்படுத்தி சென்றது. இதனால், இந்த ஆண்டு பருவமழை எந்த அளவுக்கு இருக்கும், கடந்த ஆண்டை போலவே வெள்ளத்தில் மிதக்க விடுமா? என மக்கள் தற்போதே யோசிக்க தொடங்கிவிட்டார்கள்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவ மழை வரும் 12 ஆம் தேதி ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் மழையின் அளவு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இயல்பு மற்றும் இயல்பை விட கூடுதல் அளவு இருக்கும் எனவும் தென் பகுதிகளில் இயல்பு மற்றும் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த வருடம் மழை அதிகமாக பெய்தது என்று நினைத்துக் கொண்டு இருப்பீர்கள். ஆனால் அது அப்படி கிடையாது. புயல் ஒன்றே ஒன்று மட்டுதான் உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதியே உருவாகவில்லை. ஒன்றே ஒன்று உருவாகி புயலாக மாறியது. ஆந்திராவை கடந்த போது வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூருக்கு நல்ல மழை கிடைத்தது.
அடுத்தது குமரிக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால், வட உள் மாவட்டங்களுக்கு மழையே கிடயாது. கள்ளக்குறிச்சியில் 53 விழுக்காடு இயல்பை விட குறைவாக இருந்தது. பல மாவட்டங்களில் மழை குறைவாக இருந்தது.
பெங்களூரிலே தண்ணீர் கஷ்டம் வந்தது. இந்த வருடம், வட கடலோர தமிழகத்திற்கு நன்றாக மழை இருக்கும் என கணிப்புகள் எல்லாம் சொல்கின்றன. வட கடலோர மாவட்டத்தில் சென்னையும் அடங்கும். பயங்கரமான மழை பெய்யுமா என்பதை எல்லாம் 5 நாள் முன்புதான் சொல்ல முடியும். எந்த அளவு மழை பெய்யும், அதி கனமழை பெய்யுமா என்பதையெல்லாம் 5 நாட்களுக்கு முன்னால்தான் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில்தான் தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications