சென்னையை மிரட்டும் கனமழை! ரெயின் கோட், கம்பூட்ஸுடன் களத்தில் பேரிடர் ஸ்பெஷலிஸ்ட் ராதாகிருஷ்ணன் ஆய்வு
சென்னை: சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்திற்கு மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது. மழை பெய்தால் வரும் கோடைக்காலம் வசந்த காலமாக இருக்கும் என்ற போதிலும் சென்னை மக்கள் மழை என்றாலே அலறுவார்கள்.

அதற்கு காரணம் குண்டு குழியுமான சாலைகள், அதில் தேங்கியிருக்கும் தண்ணீர், தனித்தீவாகும் குடியிருப்புகள் உள்ளிட்டவைகள்தான். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மழை நீர் சாலைகளில் தேங்காத வண்ணம் சீரமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அது போல் மழை பெய்த சிறிது நேரத்திலேயே மோட்டார் வைத்து தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் நாள்கணக்கில் தேங்கவில்லை என கூறுகிறார்கள். இதற்காக வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதே மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
அது போல் பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சாலைகளை சீரமைக்க 27 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். குண்டும் குழியுமாக மாறும் சாலைகளில் உடனடியாக தற்காலிக அடிப்படையில் பேட்ச் ஒர்க் செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் பெய்து வரும் மழையால் 85-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் ஓரிரு மணி நேரத்திற்குள்ளாக மழைநீர் அகற்றப்பட்டது. மழைநீர் தேக்கம் மற்றும் அகற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ராதாகிருஷ்ணன் கூறுகையில் வானிலை மையம் எச்சரிக்கைக்கு ஏற்ப மாநகராட்சி பேரிடர் செயலாக்க திட்டம் உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பல்வேறு இடங்களில் முன்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 37 தாழ்வான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கும் மழை நீரை அகற்றும் பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவிலும் மழை பெய்யக் கூடும் என்பதால் அதற்கேற்ப இரவு பணிகளிலும் அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி குடிநீர் வடிகால் போன்ற துறை அதிகாரிகளும் இருப்பர். சிசிடிவி கேமரா வாயிலாக மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையம் வாயிலாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாநகராட்சியில் உள்ள 22 சுரங்கபாதைகளில் மழை நீர் தேங்காத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அது போல் நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மழை பெய்த போது எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறதா என்பதை ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ரெயின் கோட், கம்பூட்ஸ் போட்டுக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஒருவர் குடை பிடித்த போது வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications