சென்னையை புரட்டிப்போடும் கனமழை.. அக்.,15, 16 தேதிகளில் ஆரஞ்ச் அலர்ட்.. மக்களே கவனம்
சென்னை: சென்னையில் பல இடங்களில் இன்று காலையில் கனமழை பெய்த நிலையில் வரும் 15 மற்றும் 16ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. 15ம் தேதிக்கு பிறகுவடகிழக்கு பருவமழை என்பது தொடங்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கிடையே தான் கடந்த ஒரு வாரமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மழை வெளுத்து வாங்கியது.
அதேபோல் சென்னையிலும் பல இடங்களில் காலை முதல் கனமழை பெய்தது. ராயப்பேட்டை, சேப்பாக்கம், மணலி, மாதவரம்,புழல், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் தான் சென்னைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரஞ்ச் அலர்ட் காரணமாக அக்டோபர் 15 மற்றும் அக்டோபர் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலர்ட் என்றால் ஒரு நாளில் அதாவது 24 மணிநேரத்தில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகும். அதோடு ஆரஞ்ச் அலர்ட்டின்போது மோசமான காலநிலை ஏற்படலாம். இதனால் போக்குவரத்து சாலை, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, மின் சப்ளை உள்ளிட்டவை பாதிக்கப்படலாம்.
இதனால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட அரசு என்பது மழைக்கால முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு உஷாராகி உள்ளது. சென்னையில் மிக கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சகம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சகம், சென்னை மாநகராட்சி இணைந்து மேற்கொண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛ தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியானது, இன்று அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கோவையின் மலை பகுதிகள், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் 14ம் தேதியும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அன்றைய தினம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் , காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications