இன்னொரு ரவுண்டு! அடுத்த 3 நாட்களில்.. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
சென்னை: வங்கக்கடலில் ஏற்கெனவே உருவான புயல் சின்னம் வலுவிழந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 3 நாட்களில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், “நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.25) காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.
எனவே இன்று (டிச.25) வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.26 மற்றும் டிச.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.28 முதல் டிச.31 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வரை தமிழ்நாட்டில் சராசரியாக 57.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 43.6 செ.மீதான் பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் இயல்பை விட 32% கூடுதலாக மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85%, திருபத்தூர் மாவட்டத்தில் 84%, விழுப்புரம் 65%, சேலம் 62%, திருநெல்வேலி 61%, தருமபுரி 59% என மழை பெய்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த அக்.1ம் தேதி தொடங்கி இன்று வரை 104.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications