வங்கக்கடலில் ‘சிவப்புக் கண்’.. 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்த மாதம் முழுக்க?
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. செப்டம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இந்த மாதம் தொடங்கியது முதலே தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக மழை போக்கு காட்டி வந்த நிலையில், கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதேபோல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல் வடமாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் கடற்கரையை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ மற்றும் 7.6 கிமீ உயரத்தில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியானது உயரத்துடன் தென்மேற்கு திசையில் சாய்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மகாராஷ்டிராவை நோக்கி நகர்ந்து, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும், அக்டோபரில் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி வருவதால், இன்று (செப்டம்பர் 12) முதல் ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மறறும் வடகிழக்குப் பகுதிகளிலும் அடுத்த மூன்று நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அதன்பிறகு குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications