அடுத்த 3 மணி நேரம்.. 14 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதனால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மொத்தம் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் அசால்டாக வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டுகிறது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவுகிறது. இருப்பினும், ஓரிரு இடங்களில் வெப்பத்தைக் குளிர்விக்கும் வகையில் மழையும் பெய்து வருகிறது.

இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் உச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த மழை வெப்பத்தை சற்றே தணிக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மழை இருக்கு
இரவு 7 மணி வரை பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் சாலைகளிலும் நீர் தேங்கும் சூழல் இருப்பதால் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "கடலோர ஆந்திரா பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்தவரை இன்று முதல் ஏப்ரல் 17 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. நாளை மற்றும் ஏப்ரல் 15ம் தேதி அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (13-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications