ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்!
இந்தியாவில் 2026-ம் ஆண்டு பருவமழை குறைவாகப் பெய்யும் என்று தனியார் வானிலை கண்காணிப்பு நிறுவனமான ஸ்கைமெட் எச்சரித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் இந்தியாவில் சராசரியை விட 94 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கணிப்பு விவசாயிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எல் நினோவின் தாக்கம் என்ன?
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லா நினா (La Niña) நிலை நீடித்து வந்தது. இப்போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ (El Niño) நிலை உருவாக சாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்று ஸ்கைமெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜதின் சிங் தெரிவித்தார்.
பொதுவாக எல் நினோ உருவாகும் போது இந்தியாவில் பருவமழையை பாதிக்கும். இந்த முறை ஜூன்-செப்டம்பர் காலத்தின் இரண்டாவது பாதியில் மழைப்பொழிவு கணிசமாகக் குறையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது?
இந்தியாவின் நீண்டகால சராசரி மழைப்பொழிவு (LPA) 868.6 மில்லிமீட்டர் ஆகும். 2026 ஜூன்-செப்டம்பர் காலத்தில் இது 817 மில்லிமீட்டர் அளவில் மட்டுமே இருக்கும் என்று ஸ்கைமெட் கணித்துள்ளது. இந்த அளவீட்டில் +/-5 சதவீதம் வரை திருத்தம் இருக்கலாம் என்றும் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் மழைப்பொழிவு குறைய 40 சதவீதம் வாய்ப்பும், வறட்சி ஏற்பட 30 சதவீதம் வாய்ப்பும், வழக்கமான மழைப்பொழிவு பெய்ய 20 சதவீதம் வாய்ப்பும், அதிக மழை பொழிய 10 சதவீதம் வாய்ப்பும், அதிகப்படியான மழைக்கான வாய்ப்பு பூஜ்ஜியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த மாத இறுதியில் தனது அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பை வெளியிட உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
பருவமழை இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. நாட்டின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மழையை நம்பியே உள்ளன. மழை குறைந்தால், நெல், கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் உள்ளிட்ட முக்கிய பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து விலை உயரும்.
உணவு பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
உணவு உற்பத்தி குறைந்தால், சந்தையில் பொருட்களின் விலை உயரும். இது உணவு பணவீக்கத்தை (food inflation) கணிசமாக அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக காய்கறி, பழங்கள், தானியங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு எளிய மக்களின் அன்றாட செலவை அதிகரிக்கும். குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர வருமானக்காரர்களுக்கு இது பெரும் சுமையாக அமையும்.
இந்தியாவில் தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட கதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள், கணிக்கப்பட்டது போல் மழைப்பொழிவு சராசரி அளவை விட குறைந்தால் சங்கில் தொடர் பிரச்சனையாக இவ்தியாலில் அடுத்தடுத்து பிரச்சனை உருவாகும்.
மேலும், விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்படும். இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் மெதுவாக்கும் வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளும் இந்த எல் நினோ நிலைக்கு தயாராக இருக்க வேண்டும்.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ கணிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்பதால் அதன் பிறகு தெளிவான கண்ணோட்டம் கிடைக்கும். இருப்பினும், எல் நினோவின் தாக்கம் உறுதியானால், 2026-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்துக்கு சவாலான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உணவு பணவீக்கம் அதிகரிக்கும் அபாயத்தை முன்கூட்டியே கருத்தில் கொண்டு, அரசு மற்றும் விவசாயிகள் தயாராக இருப்பது அவசியம்.












Click it and Unblock the Notifications