அடி வெளுக்கப்போகும் மழை.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கோடை வெயில், தற்போது வரை வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே பெய்யும் மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலபரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை 10ம் தேதி வரை 79% கூடுதலாக மழை பொழிந்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக 68.9 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால், 123.7 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 120.6 மி.மீ, சென்னையில் 204 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 6.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 45.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா -18, -1 சதவிகிதம் குறைவாகும்.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயரவில்லை. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதவது இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் பரவலாக 7-11 செ.மீ அளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications