திடீரென சென்னையை நனைத்த சாரல் மழை.. "சம்பவம்" இருக்காம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது சென்னையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
வழக்கமாக தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழைதான் முதலில் மழையை கொண்டு வரும். அதேபோல இந்த ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் மழை செழிப்பாக தொடங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழையின் அளவு போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஓரளவு இயல்பாக பெய்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்த மழை காலை வாரிவிட்டது. மழை குறைந்ததால் கேரளாவில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

கர்நாடகாவின் நீர் பிடிப்புகளில் மழை குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனவே மேட்டூருக்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீரை நம்பி, டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நிலையில், கர்நாடகா போதுமான நீரை திறக்காதது பெரும் ஏமாற்றமளித்தது. இப்படியாக தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
அக்டோபரில் தொடங்கிய இந்த மழை, தாராளமாக பெய்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளவை எட்டின. தென் மாவட்டங்களில், டிச.16 மற்றும் 17ம் தேதிகளில் பெய்த கனமழை வரலாறு காணாத வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் சுமார் 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் திண்டுக்கல், தேனி மற்றும் நீலகிரியில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 6ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதே 7ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 8ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் பரவலான பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நகர்ப்புறத்தில் வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், அண்ணாநகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications