வடகிழக்கு பருவமழை.. 24 மணி நேரமும் தயார்.. வதந்திகளை நம்ப வேண்டாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் 24x7 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர கால உதவி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலும் திடீர் என மழையும் பெய்து குளிர்வித்து வருகிறது. நவம்பர் மாத பிற்பகுதியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24*7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்க தொலைபேசி எண்கள் /அவசர கால உதவி எண்களான 044-27237107, 044-27237207, கைப்பேசி/வாட்ஸ்அப் எண் 9384056227 வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அதேபோல் சமூக வலைத்தளங்களான Twitter @KanchiCollector @DDMAKANCHIPURAM,Facebook @kanchicolltr, Instagram @kanchicolltr வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகிழக்கு பருவமழை-2023 பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறும், மேலும் பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடினை மட்டும் பின் தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications