கடலாக மாறிய தூத்துக்குடி நகரம்.. மக்களே உதவி தேவையா?.. உடனே அழையுங்கள்.. கனிமொழி எம்.பி
தூத்துக்குடி : பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்கள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும் என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய கனமழை 30 மணி நேரத்திற்கும் மேலாக இன்று வரை விடாமல் பெய்து வருகிறது. சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. சாத்தான்குளத்தில் தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர்.

கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாத்தான்குளம் அண்ணாநகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அந்த பகுதியில் வசித்த 20 பேர் வெளியேற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பேய்க்குளம், கருங்கடல், அரசூர், பழனியப்பபுரம், பண்ணம்பாறை, தட்டார்மடம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் பிசான சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 93 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஊர்களிலும் 60 செமீக்கு மேல் பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. தெருக்கள், சாலைகள் வெள்ளக்காடாயின.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை சாலை, ஜிசி சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், ராஜகோபால் நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து, தண்ணீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பல மக்கள் உதவி கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். உதவி தேவைப்படுவோர் வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார் தூத்துக்குடி எம்.பி கனிமொழி. அவர் தனது முகநூல் பக்கத்தில் வாட்ஸ் அப் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவ முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம். தொடர்பு எண்: +91 80778 80779 - கனிமொழி எம்.பி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications