பேய்காற்று + ஆலங்கட்டி மழை.. பெங்களூரை குளிர வைத்த கோடை மழை.. ஹேப்பியான மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில் இன்று பேய்காற்றுடன் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பெங்களூர் குளுகுளு கிளைமேட்டுக்கு மாறி உள்ளது.
பெங்களூரில் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்தனர். அதோடு நகரின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போர்வெல்லில் தண்ணீர் வற்றியதால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் பிரச்சனை தலைத்தூக்கியது.

இந்த தண்ணீர் பிரச்சனைக்கு நடுவே அதிகரித்து வந்த வெப்பத்தால் வீட்டில் ஃபேன், ஏசி இன்றி இருக்க முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் தான் பெங்களூரில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதாவது மே மாதம் முதல் வாரத்தில் கோடை மழை பெய்யும் என கணித்தது.
அதன்படி கடந்த 6 நாட்களாக பெங்களூரில் வெயில் ஓரளவு தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதோடு அவ்வப்போது சில இடங்களில் மழை லேசாக பெய்து வந்தது. இந்நிலையில் தான் இன்று மாலையில் பெங்களூரின் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது.
அதன்படி பெங்களூர் சிவாஜி நகர், ஓகலிபுரம், கேஆர்புரம், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், உள்பட நகரின் பல்வேறு முக்கிய நகரில் மாலையில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்தது. இதுதவிர ஹெப்பால், நாகவரா, ஆர்டி நகர், பாகலூர், எலகங்கா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. உல்லால் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
மேலும் சிக்கஜாலா பகுதியில் கனமழை பெய்தது. பெங்களூர் புறநகர் பகுதியான நெலமங்களாவிலும் இடியுடன் கூடிய கனமழை என்பது பெய்தது. பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இருப்பினும் கூட வெயிலின் கோரப்பிடியில் சிக்கி தவித்த மக்கள் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இன்று பெய்த கனமழையால் நகரின் கிளைமேட் என்பது மொத்தமாக மாறி உள்ளது. வெப்பம் தணிந்து குளிரான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications