கேரளாவில் வெளுத்தெடுக்கும் மழை.. 8 பேர் பலி.. 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
கனமழை காரணமாக கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பலத்த காற்று காரணமாக மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாலக்காடு வடக்கஞ்சேரியில் தென்னை மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், பத்தினம் திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications