வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்.. சென்னைக்கு பாதிப்பா?
சென்னை: டானா புயல் கரையை கடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமீபத்தில் சென்னையை கடந்திருந்தது. எனவே இந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு இரண்டு பருவமழைகள், போதுமான அளவுக்கு மழையை கொடுக்கும். அதன்படி, கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இது நாடு முழுவதும் 70% நிலப்பரப்புக்கு மழையை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் போதுமான மழையை கொடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து செப்டம்பர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இது இயல்பை விட 25% அளவுக்கு கூடுதலாக மழையை கொடுத்திருக்கிறது. அதாவது அக்.1 முதல் இன்று வரை 171.5 மி.மீ அளவுக்குதான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 214.2 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

இந்த மழை பொழிவுக்கு சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும் காரணம். தென்மேற்கு வங்கக்கடலில் முதலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, அது மெல்ல மெல்ல வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, சென்னைக்கு அருகே நிலை கொண்டது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து. ரயில்கள் மற்றும் விமான சேவை கூட கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
ஆனால் இறுதி நேரத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து, திருப்பதி அருகே கரையை கடந்தது. இப்படி இருக்கையில், தற்போது வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, "நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். இது நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, நவ.2-ஆவது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவ. 7 முதல் 11 வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் என்றாலே சென்னைக்கு கண்டம் இருக்கிறது என பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், சென்னை குறித்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மறுபுறம், மழை வெள்ளத்தை தாங்கும் அளவுக்கு சென்னையின் கட்டமைப்புகள் சிறப்பாக மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே கனமழை குறித்த அச்சம் வேண்டியதில்லை.












Click it and Unblock the Notifications