வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனி கனமழை விடாது! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது. குறிப்பாக காவிரி படுகை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கும் போதே கனமழை கொட்டி தீர்த்தது. சொல்லப்போனால் அதற்கு 2 நாட்கள் முன்பே கனமழை கொட்டத் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் இந்த முறை கூடுதலாக மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது.
அதன்படி அக்டோபர் மாதத்தில் இயல்பை விட அதிகமாகவே மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் மழை இன்றி வெயில் அடித்தது. கோடைக்காலத்தில் அடித்தது போல வெயில் விட்டு விளாசியது. எனினும் அதற்கு அடுத்த இரு வாரத்தில் நவம்பர் மாதத்தில் மிக கனமழை, அதிகனமழை என மழை கொளுத்தி எடுத்தது.
டிசம்பரில் ஏமாற்றிய மழை
அடுத்தடுத்து உருவான காற்றழுத்து தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. டிட்வா புயலாலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த மழை நீடித்த நிலையில் பின்னர் மழை வெகுவாக குறைந்து வழக்கமாக இல்லாததைவிட குளிர் அதிகமாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்கள் முதல் சென்னை வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
எனினும் டிசம்பர் மாதத்தில் அதற்கு பிறகு மழை பெய்யாமல் இருந்தது. சரியாக ஜனவரி பிறந்த புத்தாண்டு அன்று சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தென்காசி, நெல்லை மாவட்டத்திலும் 2 ஆம் தேதி மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலிலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் இன்று மாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
8, 9 ஆம் தேதிகளில் கனமழை வெளுக்கும்
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். இதனால் தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக காவிரி படுகை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications