கொடைக்கானல் கூடுதலா குளிருதே.. மதுரையும் மழையில் நனையுதே! கோடையில் குளிர வைத்த வருண பகவான்..!
மதுரை:கோடை வெயில் கொளுத்தி வரும் போதிலும் வருண பகவானின் கருணையால் மதுரை மற்றும் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரு பகுதிகளில் இன்றும் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் மழை தொடர வேண்டும் எனவும் அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெப்ப அலை தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

அதிகாலை நேரங்களிலேயே வீட்டில் தங்கி இருக்கும் மக்கள் புழுக்கத்தை உணர முடிகிறது. மேலும் காலை 7 மணியிலிருந்து வெப்பத்தின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பம்: தமிழகத்தில் வெப்ப அலை வீசிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை நூறு டிகிரி பாரஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அதிக இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது. இன்றும் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை இல்லாவிட்டாலும் வெப்ப நிலை அதிகரிக்கும், தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் இன்று கூடுதல் வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரித்து இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் வருகிற 15ஆம் தேதியும் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொடைக்கானல்: இந்த நிலையில் அறிவித்தது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயிலும் மாலை நேரங்களில் பணியின் தாக்கமும் கொடைக்கானலில் இருந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் மேல்நிலைப் பகுதியிலான மன்னவனூர் பூம்பாறை ஆகிய பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக குளுமையான சீதோசன நிலை காணப்படுகிறது தற்போது பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை: நேற்று போலவே இன்றும் மதுரையில் நல்ல மழை பெய்தது மதுரை வடக்கு, தல்லாகுளம், கள்ளந்திரி விரகனூர், செல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதேபோல மேலூர், திருமங்கலம் ஏழுமலை, புலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications