சென்னைக்குள் ரெட் தக்காளி.. டமால் டுமீலுடன் வெளுக்க போகுது மழை.. அடுத்த 10 நாள்! தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடர்ந்த மேகங்கள் சென்னை நகருக்குள் நகர்ந்து வருவதால், இடி மின்னலுடன் நல்ல மழை பெய்யும். வட சென்னையில் சில பகுதிகளை தவிர்த்து, மத்திய, தெற்கு மற்றும் மேற்கு சென்னையின் மற்ற அனைத்து பகுதிகளிலும் அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேவேளையில் இடையிடையே மழையும் பெய்தது. இதனால், வெப்பம் அதிகமாக இருந்தாலும் அதன் தாக்கத்தை சற்று குறைவாகவே உணர முடிந்தது. இன்றும் மதிய வேளையில் வெயில் வெளுத்து வாங்கியது. பிற்பகல் வேளைகளில் வெளியில் சென்றவர்கள் வியர்வையில் குளிக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
ஆனால், மாலையில் சட்டென்று வானிலை மாறியது. சென்னை எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. மாலை 5 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், பட்டாபிராம், ரெட்ஹில்ஸ், ஆகிய இடங்களிலும் மழை பெய்தது.
இந்த நிலையில்தான் சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் கூறியுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் கூறியிருப்பாதாவது:- சிவப்பு தக்காளி சென்னை சிட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.. டமால் டுமீலுடன் நல்ல மழை பெய்யும்.
வட சென்னையில் சில பகுதிகளை தவிர்த்து, மத்திய, தெற்கு மற்றும் மேற்கு சென்னையின் மற்ற அனைத்து பகுதிகளிலும் அதிக தீவிர மழை பெய்யும். அடுத்த 10 நாட்கள் காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான நேரம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications