இன்று முதல் அடுத்த சில மாதங்களுக்கு மழை கிடையாது.. வறண்ட வானிலை மட்டும்தான்! வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த சில நாட்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜனவரியில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் நிறைவடையும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு வானிலை இதுபோலதான் இருக்கும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2 செ.மீ, மாஞ்சோலையில் (திருநெல்வேலி) 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என கூறப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications