திருவொற்றியூர் டூ தாம்பரம்! சென்னையை நனைத்த சாரல் மழை.. ஜில்லென்று மாறிய வானிலை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வடசென்னை முதல் தென் சென்னை வரை நகரின் பல பகுதிகளில் அடுத்த 3 மணி நேரம் வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது. அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன.
திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதே போல இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அண்ணா நகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், அயனாவரம், பாடி, அம்பத்தூர், ரெட்டேரி, மாதாவரம், திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி,மயிலாப்பூர், கிண்டி, தாம்பரம் என பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்த அளவில் அயனாவரம், பூவிருந்தவல்லி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருப்போரூர், தாம்பரம், பெரம்பூர், புரசைவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், மாதவரம், அமைந்தகரை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வானம் மேக மூட்டமாகவே காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு குளுமை பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications