ஜில்லுன்னு ஒரு அறிவிப்பு.. தமிழகத்தில் 4 மாவட்டத்துல மழை! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கானு பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் தலைதூக்கியுள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பருவமழை அனைத்தும் கடந்த ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வெயில் மண்டையை பிளந்து வருகிறது. அடுத்த வரும் நாட்களில் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, மார்ச் 5 முதல் 11 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், "சேலத்தில் 103 டிகிரி பரான்ஹீட், ஈரோடு 100, தருமபுரி 101, கரூர் 100, மதுரை 98, நாமக்கல் 98, திருச்சி 95, தஞ்சாவூர் 95 டிகிரி பரான்ஹீட் என வெயில் பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பால் 4 மாவட்ட மக்களும் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
வானிலை மாற்றம்: தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகாவிலும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டதால் போதுமான அளவுக்கு நீர் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாததால்தான் இந்த அளவுக்கு வறட்சி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications