இரவு 10 மணி வரை இந்த 22 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பல இடங்களில் 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று இரவு 10 மணி வரை திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், 25, 26 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும், 27 முதல் 29 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறுநாளும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 27 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications