ரெட் அலர்ட் கொடுத்தும்.. சென்னையில் அதிகனமழை இல்லையே ஏன்? பாலச்சந்திரன் விளக்கம்
சென்னை: அதிகனமழை குறித்து சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மழை தீவிரமாக பெய்யவில்லை. இது குறித்து விளக்கமளித்த பாலச்சந்திரன், "ரெட் அலர்ட் கொடுத்தால் சென்னை முழுவதும் அதிகனமழை பெய்யும் என அர்த்தமில்லை" என்று கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா மற்றும் சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. இது தற்போது ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில்

நுங்கம்பாக்கம் - 139.0 மி.மீ
மீனம்பாக்கம் - 116.4 மி.மீ
எண்ணூர் துறைமுகம் - 165.5 மி.மீ
சென்னை - 140.5 மி.மீ
JAYA ENGINEERING CLG - 97.5 மி.மீ
VIT CHENNAI - 80.0 மி.மீ
மாமல்லபுரம் - 78.5 மி.மீ
புழல் - 179.0 மி.மீ
வில்லிவாக்கம் - 160.5 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் - 154.0 மி.மீ
ஒய்எம்சிஏ நந்தனம் - 134.0மி.மீ
பள்ளிகரணை - 122.2மி.மீ
ரெட் அலர்ட் விளக்கம்: என சென்னையில் பல பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னைக்கும் அதன் சுற்றுவாட்டார மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் பல மேற்கொள்ளப்பட்டிருந்தன. ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. சில ரயில் சேவைகள் ரத்த செய்யப்பட்டிருந்தன. வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
ஆனால், இன்று சென்னையில் அவ்வளவாக மழை இல்லை. காலை லேசான தூறல் இருந்தது. மதியம் கொஞ்சம் நேரத்துக்கு மிதமாக மழை பெய்தது. அவ்வளவுதான். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ரெட் அலர்ட் விட்டும் மழை பெய்யாதது ஏன் என்று விளக்கமளித்துள்ளார்.
ரெட் அலர்ட் இருந்தும் மழை இல்லை:இது குறித்து அவர் பேசியதாவது, "வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை விளக்கவே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் எனபதை எச்சரிக்கவே இந்த அலர்ட் கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கைகாகவும் இந்த அலர்ட் கொடுக்கப்பட்டது. சென்னைக்கு ரெட் அலர்ட் எனில், எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்பது அர்த்தமல்ல" என்று கூறியுள்ளார்.
நாளைக்கு ஏன் ரெட் அலர்ட்?: நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்தும் விளக்கமளித்துள்ளார். "காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பெய்துள்ள மழையின் அளவு, தற்போதுள்ள நிலவரம், காற்றின் வேகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மீண்டும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதன் காரணமாகவே மீண்டும் அலர்ட் கொடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கி.மீ வேகத்தில் மெல்ல நகர்ந்து வருகிறது. இது நாளை சென்னைக்கும், தெற்கு ஆந்திராவுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications