அடித்து நொறுக்கும் வெயில்.. கொளுத்திப் போட்ட மார்ச்! 11ம் தேதிவரை இப்படித்தான் இருக்குமாம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் இப்படித்தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜனவரி 15ம் தேதியுடன் தமிழ்நாட்டில் பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.

பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் வெப்பநிலை இதே அளவில்தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. அதேபோல, மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவும் இல்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103.28, கரூர் பரமத்தியில் 102.2, மதுரை விமான நிலையம் பகுதியில் 100.04, சேலத்தில் 100.76, திருச்சியில் 100.22, கோவையில் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் நாட்களில் இன்றும் 2-3 டிகிரி அதிகமாக வெயில் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், மேலும் சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications