மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிவு.. பாசனத்திற்கு 1 வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும்
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 507 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வேலூர் மாவட்டம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பல கோடி மக்களின் ஜீவாதாரமாக உள்ளது மேட்டூர் அணை. அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். பருவமழை ஏமாற்றும் காலங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூட தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி விட்டது. கர்நாடகாவில் 125 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் மழையை காரணம் காட்டி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா அரசு. பருவமழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர் வரும் என்ற நிலை உள்ளது.
பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து 670 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 392 கன அடியாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 42.50 அடியாக உள்ளது. தற்போது அணையில் 13 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 1 வாரத்திற்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.
குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. பல இடங்களில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிகிறது. குறுவை சாகுபடிக்கு கூட தண்ணீர் கிடைக்காது என்ற நிலையில் சம்பா, தாளடி சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் மேட்டூர் அணையை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications