மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு.. முழு கொள்ளளவை எட்டுவது எப்போது?
சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 மாதங்களுக்குப் பிறகு 70 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 100 அடிக்கும் மேல் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காமல் அணை நீர்மட்டம் குறைந்து விட்டது.
ஒவ்வொரு ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். நடப்பாண்டில் கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

காவிரியில் தண்ணீரை கர்நாடகா திறக்காத நிலையில், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு முழுவதும் குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவைக் கண்டு 30 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சியை சந்தித்தது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை அக்டோபர் 10ஆம் தேதி முதல் நிறுத்தியது நீர்வளத் துறை.
தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கான நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 66 நாட்களில் 39 அடி அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த ஜூலை மாதம் 69 அடியாகக் குறைந்த நிலையில், சுமார் 143 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 69 அடியாக உயர்ந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்த பிறகு, இறுதிப்போக சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து சுமார் 22 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,730 கனஅடியில் இருந்து 2,823 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 69. 35அடியில் இருந்து 69.87 அடியாக உயர்ந்துள்ளது. அணையில், நீர் இருப்பு 32 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 நீடிக்கிறது.
கர்நாடகா அரசு கை விட்டாலும் வருண பகவான் கருணையினால் மழை பெய்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. முழு கொள்ளளவை எட்டுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications