முதல்வர் போட்ட உத்தரவு.. வேட்டியை மடித்துக்கட்டி இறங்கிய சேகர்பாபு! திமுகவினர் கன்ட்ரோலில் கொளத்தூர்
சென்னை: சென்னையில் கடந்த 4 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், களத்தில் மக்களுக்கு உதவவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் சேகர்பாபு, முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் களமிறங்கியுள்ளார்.
சென்னையை பொறுத்த அளவில் கடந்த 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை உட்பட 5 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை பொழிவை பொறுத்த அளவில் அதிகபட்சமாக கொளத்தூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது.

மேலும் மழையால் பாதிக்கப்படுபவர்கள் அணுக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 04425619204, 04425619206, 04425619207 என்கிற எண்ணிலும், +91 94454 77205 என்கிற வாட்ஸ்அப் எண் மற்றும் 1913 என்கிற எண்ணிலும் உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் காலை வரை கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால், மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு உட்பட திமுக நிர்வாகிகள் பலர் களமிறங்கியுள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தொடர்ந்து மழை பெய்வதால் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நின்ற பின்னர் 2 மணி நேரத்தில் மழை நீர் வடிந்துவிடும். கொளத்தூரில் அதிகாரிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர்" என்று கூறியுள்ளார். தற்போது குமரன் நகரில் மழை நீர் அதிக அளவில் தேங்கியிருக்கிறது. இதனால் இருச்சக்கர வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றிருக்கிறது.

இரவு 10.30 மணியளிவில் மழை குறைந்திருப்பதால், தேங்கியிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியிருக்கிறது. கொளத்தூர் தவிர சென்னை வேளச்சேரியில் அதிக அளவு மழைநீர் தேங்கியிருக்கிறது. வேளச்சேரி கால்வாய் நிரம்பியிருப்பதால் ராம் நகர் மற்றும் விஜயா நகர் பகுதியில் மழைநீர் தேங்கியிருக்கிறது. மழை பெய்த போது சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது மழை நீர் வடிந்து வருகிறது. எனவே சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications