சபரிமலையில் கனமழை.. நீரில் நனைந்த ஐயப்ப பக்தர்களின் காணிக்கை பணம்.. எவ்வளவு ரூபாய் தெரியுமா?
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அளித்த காணிக்கை பணம் மழைநீரில் நனைந்துவிட்டது. அதை காய வைக்கும் பணிகளில் தேவஸ்தானம் இறங்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆடி மாத சிறப்பு பூஜைக்காக நேற்று முன் தினம் மாலை திறக்கப்பட்டது. வரும் 21 ஆம் தேதி வரை அதாவது நாளை மறுதினம் வரை நடை திறந்திருக்கும்.
நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வசதியாக நிலக்கல் மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக வலுப்பெற்று வருகிறது. இதனால் கேரளா, தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் சபரிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மழையில் நனைந்து விட்டது. பழைய காணிக்கை பெட்டியிலிருந்து காணிக்கை பணத்தை கொண்டு செல்லும் கன்வேயர் மழைநீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் எவ்வளவு பணம் தண்ணீரில் நனைந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. தண்ணீரில் நனைந்த பணத்தை உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர், மோட்டார் பம்ப் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய உண்டியல் முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பழைய உண்டியல் காணிக்கையை புதிய உண்டியலுக்கு கொண்டு செல்லும் கன்வேயர்கள் இயங்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை கோணிப்பையில் கட்டி எடுத்துக் கொண்டு அதை காய வைக்கப்பட்டு புதிய உண்டியலில் மாற்றப்படும்.
குடோனில் வைக்கப்பட்டிருந்த பணம் மழை நீரில் நனைந்துவிட்டது.இதற்கு காரணம் குடோனில் உள்ள சுவற்றில் மழைநீர் ஒழுகுவதே ஆகும். புதிதாக கட்டப்பட்ட குடோனில் அறிவியல் ரீதியாக கட்டப்படவில்லை. அதனால்தான் தண்ணீர் லீக்காகி பணம் நனைந்துவிட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications