நாளை முதல் மழை வெளுக்கப்போகுது.. இந்த முறை டார்கெட் எந்தெந்த மாவட்டங்கள்? டெல்டா வெதர்மேன் கணிப்பு!
சென்னை: டிசம்பர் 10 (நாளை) முதல் பருவமழை தீவிரமடைவதால் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை கூடுதல் எச்சரிக்கை தேவை என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த மழைச்சுற்றுகள் தற்போதைய தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது. பருவமழை டிசம்பர் 10 முதல் தீவிரமடைவதால் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை எச்சரிக்கை தேவை என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள காணொளியில், “தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிசம்பர் 11 ஆம் தேதி அடையக்கூடும்.
அதன்பிறகு இது மெதுவாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் விளைவாக 12, 13 ஆகிய தேதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிர மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்காம் சுற்று வடகிழக்குப் பருவமழை, வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பிரதான மழைப்பொழிவை கொடுக்கும். அதேசமயம், வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய உள்மாவட்டங்களிலும் நல்ல மழையைக் கொடுக்கும். கொங்கு மண்டலம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் மழையைக் கொடுக்க வாய்ப்புள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை 11-ம் தேதி அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரளவு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் அந்த பகுதிகளில் டிசம்பர் 10 ஆம் தேதி நாளை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். டிசம்பர் 10-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் போன்ற இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 11ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை போன்ற சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மேலும் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பிற பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 12ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போன்ற சில இடங்களில், வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யும்.
டிசம்பர் 13 ஆம் தேதி தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications