இன்று தமிழகத்தில் தரமான சம்பவம்! "ஹாட் ஸ்பாட்" எங்கே பாருங்க.. சென்னையில் மழை இருக்கா? வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மழை பெய்யுமா என்பது குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெப்பம் ரொம்பவே உக்கிரமாக இருந்தது. பிப். மாதமே ஒரு சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுவிட்டது.

அதன் பிறகும் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரித்த நிலையில், மே மாதம் மாநிலம் முழுக்க உச்சம் தொட்டது. பொதுமக்களால் மதிய நேரம் வெளியே வர கூட முடியாத சூழலே நிலவியது.
வானிலை: குறிப்பாகச் சென்னையில் ஈரப்பதம் காரணமாக வெப்பம் மிக மோசமாகவே உணரப்பட்டது. இப்போது மாநிலத்தில் மெல்ல வெப்பம் குறைந்து வரும் நிலையில், ஆங்காங்கே மழையும் கூட பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாட் ஸ்பாட்டில் இருப்பது பெங்களூர்.
KTCC (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) பகுதிகளைப் பொறுத்தவரைக் காஞ்சிபுரம் திருவள்ளூரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். சென்னையிலும் கூட ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தரமணி, பெருங்குடியில் ஓரளவு மழை பெய்தது" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன் ஒருவர் ராணிப்பேட்டை பகுதியில் மழை இருக்குமா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மழை இருக்கும் என்றே தமிழ்நாடு வெதர்மேன் பதிலளித்துள்ளார்.
வானிலை மையம்: அதேபோல வானிலை மையம் வெளியிட்ட இன்றைய செய்திக்குறிப்பில், "தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications