முல்லைப் பெரியாறு அணை 138 அடியை தாண்டியது- இன்று 1,000 கன அடிநீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை!
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டிய நிலையில் இன்று அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது 152. ஆனால் இவ்வளவு நீரை தேக்க கேரளா எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க அனுமதி கிடைத்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கேரளா மாநிலத்துக்குள்தான் செல்கிறது. இதனால் இடுக்கி மாவட்டம் பாதிக்கப்படும் என்பது கேரளாவின் கவலை.

தற்போதைய வடகிழக்கு பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில் முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மழை சற்று குறைந்ததால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டமும் குறைந்தது.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 138 அடியானது. இதனையடுத்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் இன்று காலை திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடிநீர் வெளியேற்றப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications