Mumbai Rain: மிதக்கும் மும்பை.. கேப் விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.. இன்றும் பறந்த அலர்ட்! பொதுமக்கள் அவதி
மும்பை: மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை (Mumbai flood) கொட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் மிக மோசமான மழை விளாசி வருகிறது. இதனால் அங்கு நகரின் பல்வேறு பகுதிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள போதிலும், இன்று மழை சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வெயில் காலமும் சீக்கிரம் முடிந்துவிட்ட நிலையில், மழையும் சீக்கிரமே ஆரம்பித்துவிட்டது. இதனால் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் கூட சில காலமாகவே மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கனமழை
மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை மிக மோசமாக இருக்கிறது. தொடர்ச்சியாகக் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அத்துடன், ரயில் மற்றும் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களும், நடந்து செல்லவும் மக்கள் சிரமப்படுகின்றன. இந்த மழை வெள்ளத்தால் சாலைகளில் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. பாந்த்ரா கார் லிங்க் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சிகளை இணையத்தில் பரவி வருகிறது.
மக்கள் பாதிப்பு
குர்லாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மார்க்கில் சுமார் ஐந்து அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்தச் சாலை மூடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததே இந்தப் பாதிப்பிற்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
மோனோரயில்
நேற்று மாலை கனமழையால் மும்பை மோனோரயில் நடுவழியில் நின்றது. மின்தடை காரணமாக இரு ரயில்கள் அப்படியே நின்றது. உள்ளே ஏசி சேவையும் முடங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அவர்களை கிரேன் உதவியுடன் தான் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். 3 மணி நேரம் நடந்த இந்த மீட்புப் பணியில் 500+ பேர் மீட்கப்பட்டனர்.
அதேபோல கனமழை காரணமாக மும்பையில் விமானச் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 100+ விமானங்கள் தாமதமாகவே இயக்கப்படுகிறது. விமானச் சேவையில் தாமதம் ஏற்படலாம் என்றும் மழை காரணமாக முன்கூட்டியே ஏர்போர்ட்டிற்கு வரும்படியும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளனர். விமானங்கள் மட்டுமின்றி ரயில் சேவையும் கூட இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
இதற்கிடையே இன்றைய தினமும் மும்மைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் மழையின் தீவிரம் சற்று குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைந்தால் சீரமைப்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளவும் அம்மாநில அரசு தயாராக இருக்கிறது.
மும்பை மட்டுமின்றி, மகாராஷ்டிராவின் தானே, புனே, ராய்கட் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாளை ஆகஸ்ட் 21 வரை கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் பரவலான மழை இருக்கும் என்றும் சில இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications