அப்பாடா! இன்னும் ஒரு வாரத்திற்கு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வெயில் உக்கிர தாண்டவம் ஆடும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்ப நிலை இயல்பான அளவு முதல் இயல்பை விட குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தை காட்ட தொடங்கிவிட்டது. மக்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விட்டு வருவற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. தமிழ்நாடு முழுவதுமே இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையிலும் இரவு நேரத்திலும் உஷ்ணம் அதிகமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வந்த வெப்பம் இன்று சற்று தணிந்து இருந்தது. எனினும், இன்று 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.8 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
இதனிடையே, அடுத்த ஒருவாரத்திற்கு சென்னையில் வெப்பம் இயல்பான அளவு முதல் இயல்பை விட குறைவாக வெப்பம் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனியார் வானிலை ஆய்வாளாரான பிரதீப் ஜான் தனது எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது:-
அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் வெப்பம் இயல்பான அளவு முதல் இயல்பை விட சற்று குறைவானதாக இருக்கும். கொங்கு/ உள் தமிழகத்திலும் வெப்ப நிலை குறைய தொடங்கும். 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான இடத்தில் 37/39 டிரீ செல்சியஸ் ஆக குறையும். தமிழ்நாட்டில் தேர்தல் வரை வெப்ப அலைக்கான வாய்ப்பு குறைவு" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications