இஞ்ச் பை இஞ்ச் மழை பெய்யும் என்று சொல்ல முடியாது.. தமிழக அரசு செய்தது என்ன? நிர்மலா சீதாராமன் கேள்வி
டெல்லி: இஞ்ச் பை இஞ்ச் எவ்வளவு மழை வரும் என்று கணிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தென் மாவட்டங்களில் கன மழை கடும் சேதங்களை ஏற்படுத்திய நிலையில், வானிலை முன்னறிவிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி திடீரென மழை தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்குள் புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
ரயில் போக்குவரத்தை பொறுத்த அளவில் டிச.17ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயில் பாதையில் முழுவதும் மழை தேங்கியது. குறிப்பாக தாதன்குளத்தில் ரயில் தண்டவாளத்தின் கீழே இருந்த ஜல்லி கற்கள், மண் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த ரயிலில் சிக்கியிருந்த 500க்கும் அதிகமானோர் 2 நாட்களுக்கு பின்னர்தான் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது" என்று கூறியிருந்தார். அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், வானிலை மையத்தை இழுத்து மூடிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். சோஷியல் மீடியாக்களிலும் வானிலை அறிவிப்பு குறித்து விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அதில், "கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது. டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. 5 நாட்களுக்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்தது. மட்டுமல்லாது 3 மணி நேரத்திற்கு ஒருமுறையும் வானிலை எச்சரிக்கை கொடுத்தது.
எனவே மழை முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்று கூற வேண்டாம். இஞ்ச் பை இஞ்ச் எவ்வளவு மழை வரும் என்று கணிக்க முடியாது. 2015 வெள்ளத்தில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? 4000 கோடி நிதியில் இருந்து எவ்வளவு வசதி செய்திருக்கிறீர்கள். அம்பத்தூரை காப்பாற்ற என்ன வசதி செய்திருக்கிறார்கள்?" என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications