வெள்ள பாதிப்பு.. மீளாத துயரத்தில் மக்கள்.. தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்.. நிதி தருவாரா
தூத்துக்குடி: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வை தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தமிழக மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி இரவு முதல் பெருமழை பெய்தது.17ம் தேதி முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்கு புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளையும், தென் மாவட்ட வெள்ள பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், ரூ.12,659 கோடி நிதியை நிவாரணமாக ஒதுக்க வேண்டும் என்றும், உடனடியாக ரூ.2000 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தியிருந்தார். ஆனால், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நேற்று அவர் தமிழகம் வந்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வெள்ள பாதிப்பு குறித்த புகைப்பட தொகுப்பை பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.
மதியம் 2 மணிக்கு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, குறைகளை கேட்கிறார். இந்த ஆய்வுக்கு பின்னர் அறிக்கை ஒன்று தயார் செய்யப்படும். அதன் பின்னர் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications