சென்னை, மதுரையில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு தடை.. ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னை மற்றும் மதுரையில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்ப அலை காரணமாக நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோர், ஜூஸ், தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன.
அத்துடன் தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இது மே 28ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இருக்கும். இந்த சூழலில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக வெப்ப அலையால் வெப்ப வாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.
இந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் மேற்கண்ட நேரத்தில் எந்த வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெயிலில் தொழிலாளர் உடல்நலன் பாதிக்கப்படுவதை தடுக்க தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன் மூலம் சுட்டெரிக்கும் வெயிலால் கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை திறந்தவெளி கட்டுமான பணி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications