இரவு முழுக்க பெய்த மழை.. தாக்குப்பிடித்த சென்னை சுரங்கபாதைகள்.. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்கவில்லை
சென்னை: சென்னையில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தும் கூட எங்கும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் சென்னையின் சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து சேவை நிலவியது. மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் நீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன.
சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. லேசாக மழைநீர் தேங்கிய 6 இடங்களில், 4 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தாழ்வு மண்டலம்: இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வளிமண்டல சுழற்சி.. தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இந்த தாழ்வு பகுதி.. நாளை தாழ்வு மண்டலமாக மாறும். இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகிலேயே நிலைகொள்ள இருக்கிறது.
அதாவது பொதுவாக தாழ்வு மண்டலங்கள்.. நிலத்தை நோக்கி நகரும். ஆனால் சில தாழ்வு மண்டலங்கள் மிக மெதுவாக நகரும். சில தாழ்வு மண்டலம் அப்படியே நின்று கூட விளையாடும். கடந்த வருடம் வீசிய புயலுக்கு முன்பாக இதேபோல் தாழ்வு மண்டலம் நின்று விளையாடியது.
கடலோரம் நிற்கும் தாழ்வு மண்டலம் அலைகளை அதிகரிக்கும். இதனால் மழை நீர் கடலுக்கு போகாமல் திரும்பி செல்லும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த வருடம் இப்படித்தான் நடந்தது. மழை நீர் கடலுக்குள் செல்லாமல்.. அப்படியே.. மீண்டும் வெளியே வரும். அதேபோல் இந்த முறையும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் தற்போது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த முறை சென்னைக்கு அருகிலேயே இந்த மண்டலம் நிலை கொண்டு நிற்கும். ஆனால் எவ்வளவு நேரம் நிற்கும்.. எவ்வளவு மழையை கொடுக்கும் என்று தெரியாது.
16ம் தேதி மட்டுமன்றி சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது சென்னையில் 3 நாட்களில் 470 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக 24 மணி நேரத்தில் 20 செமீ மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும். இப்போது மூன்று நாட்களில் 47 செமீ வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications