வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. பொது மக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் பறக்கும் எச்சரிக்கை
மதுரை: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழை அதிகரித்துள்ளதால் அணைகளில் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்ததால் அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டியது.

மொத்த கொள்ளளவு 71 அடி என்பதால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சுமார் 6,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீர் பாசன மாவட்டங்கள் பயனடையும். வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இருப்பினும் வைகை நதி ஓடும் பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் விரிந்து படர்ந்து கிடப்பது பேராபத்தாகவும் இருந்து வருகிறது. இதனால் மதுரை மாநகரில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ, துணிகளை துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக, திறந்து விடப்பட்ட தண்ணீர், மதுரை சிம்மக்கல் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் இரு கரைகளைத் தொட்டு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக பொதுமக்களின் செல்போன்களுக்கு மெசேஜ் அனுப்பப் பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications