தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதா? வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை: வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டை விட்டு விலக உள்ள சூழலில் இன்று சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தென்காசி, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர்மட்டம் நன்றாக உயர்ந்தது. அக்டோபரில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.
மழைக்கு பதிலாக கடும் பனிப்பொழிவு நிலவியதால் பொதுமக்கள் காலை 9 மணி வரை வெளியே செல்வதற்கே நடுங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் நிறைவு பெற உள்ள நிலையில் மழை மற்றும் பனிபொழிவு குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications