குமரி முதல் சென்னை வரை 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! உங்க ஊரு இருக்கானு பாருங்க!
சென்னை: தமிழகத்திற்கு பலனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுடன் தென்மேற்கு பருவமழை காலம் இந்திய பகுதிகளை விட்டு விலகுவதால் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவியுள்ளது.
தென் தமிழகம், கர்நாடகா, கேரளா, வடமாநிலங்களுக்கு பலனை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை கடந்த மே 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த மழை இயல்பானதாக இருந்தது. இந்த நிலையில் இன்று தென் மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

இந்த நிலையில் இன்று 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை எண்ணுாரில் 14 செ.மீ., மழை பதிவானது. மாநிலம் முழுதும் பரவலாக மழை பதிவாகி உள்ளது.
தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு பருவ மழை, இந்திய பகுதிகளில் இருந்து இன்று விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக காணப்படுகின்றன.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை இன்று துவங்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications