டிசம்பர் மாதத்தில் தட்டி எடுக்கப்போகும் மழை.. புயல் உருவாகுமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வதென்ன?
சென்னை: அந்தமான் அருகே இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பகலில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் நீடிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிருஇடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழைக்கான காரணம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிர்க்கு பேட்டி அளித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், பகல்நேரங்களில் வெயிலும் அதிகாலை, இரவு நேரங்களில் கனமழையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு வெகு தொலைவில் உள்ளது. அந்தமான் அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து சென்னைக்கு அருகே டிசம்பர் மாதத்தில் வர வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்று கூறிய பிரதீப் ஜான், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் இரவிலும், அதிகாலையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறிய பிரதீப் ஜான், அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக இருந்தாலும் சராசரியை விட அதிகமாக தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்தில் கிடைத்துள்ளது என்றார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 310 மி.மீ இன்று வரை பதிவாகியுள்ளது.
டிசம்பரில் இன்னும் மழை அதிகரிக்கும். சராசரி மழை கிடைத்து விடும். நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மட்டுமே மழை குறைவாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. டிசம்பர் கடைசி வாரம் ஜனவரி முதல்வாரம் வரைக்குமே வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்பதால் பருவமழை அளவு இயல்பான அளவை எட்டிவிடும் என்றும் கூறினார் பிரதீப் ஜான்.












Click it and Unblock the Notifications