இந்திய பெருங்கடலில் கிங்மேக்கர்! நவம்பரில் தமிழகத்திற்கு அதிக மழை! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
சென்னை: தமிழகத்திற்கு நவம்பர் மாதத்தில் அதிக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் அடுத்த வாரம் மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவாகிறது என்றும் அது குறித்த அப்டேட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் அடுத்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். ஆனால் இது தமிழகத்திற்கானது அல்ல. இந்த காற்றழுத்தத்தை எண்ணி கவலைப்பட தேவையில்லை.

இது அந்தமான் அருகே அடுத்த வாரம் இந்திய சீன இடையே உள்ள பகுதியில் உருவாகிறது. ஒரு வேளை இந்த காற்றழுத்தம் வலுவிழந்தால், கிழக்கு நோக்கி வீசும் காற்றால் தமிழகத்தின் பக்கத்திற்கு தள்ளப்படும். அப்போது அதன் தீவிரத்தை வைத்துதான் தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்குமா என்பதை கணிக்க முடியும்.
ஆனால் அந்த காற்றழுத்தம் தமிழகத்திற்கு வராமலேயே இந்திய- சீன இடையே உள்ள பகுதியிலேயே வலுவடைந்து அங்கேயே கரையை கடக்கவும் வாய்ப்பிருக்கிறது. நவம்பர் மாதத்தில் எம்ஜேஓ எனும் நிகழ்வால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும். இந்திய பெருங்கடலில் இருக்கும் எம்ஜேஓ நவம்பரில் அதிக கனமழையை கொடுக்கும். ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்பும் கனமழை குறித்து கணிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 6.50க்கு வெளியிட்ட அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் காலை 10 மணி வரை மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாணவர்கள் பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் இது போன்று கனமழை பெய்தது.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று சென்னை மாவட்டத்தில் வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவித்துள்ளார். அது போல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிச் செல்வோர், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications