பலத்த காற்று + வெடித்து கொட்டும் மழை! கூடவே "ஆரஞ்சு" அலர்ட்- நள்ளிரவு வரை பெரிய சம்பவம் காத்திருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மழை காரணமாக மொத்தம் 15 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்: செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 30- 40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மழை இருக்கு: அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும் என்பதால் இந்த பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, சிறு பாதிப்புகள் ஏற்படவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications