ஆஹா.. தமிழகத்தில் மழை குறித்த அறிவிப்பு வந்துடுச்சே! 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. ஜில் கிளைமேட்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெயில் கடுமையாக இருக்கிறது. 2023ல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக கேரளாவில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. கர்நாடகாவில் முக்கிய அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்தின் மேட்டூருக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.

தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 9 மணிக்குள் விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மழை காரணமாக தாழ்வான இடங்களில் நீர் தேங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும்
பகுதி நிலவுகிறது. எனவே இன்று தொடங்கி ஏப்.28ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல ஏப்.29 தொடங்கி மே.1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்.29 வரை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட வெயில் 24 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகி வரை வெயில் இருக்கும்.
காற்றின் ஈரப்பதத்தை பொறுத்த அளவில், இன்று முதல் ஏப்.29 வரை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications