சென்னை+20 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் காலை 10 மணி வரை சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் வந்தாலே சென்னை மக்களுக்கு பீதி கிளம்பிவிடும். காரணம் வெள்ளம்தான்.. இந்த முறை கொஞ்சம் முன்கூட்டியே மழை சென்னை மக்களை பயமுறுத்திவிட்டது. அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை+வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் என இரண்டும் சேர்ந்து சென்னைக்கு அதிக அளவில் மழையை கொடுத்தது. அக்.15,16 தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கியது.

அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்து ஆந்திராவுக்கு சென்றதால் ஓரளவுக்கு மழையின் தீவிரம் குறைந்தது. தற்போது சென்னையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மழை இல்லை. இருப்பினும், வழக்கமான வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் இயல்பே, இரவிலும், அதிகாலையிலும் தீவிரமாக இருப்பதுதான். அந்த வகையில் இன்று அதிகாலை முதல் வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதே நேரம் காலை 10 மணி வரை சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
எச்சரிக்கையின்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது என்று வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications