தக்காளி இல்லை.. எலுமிச்சைதான்! சென்னை+13 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை 'ஆரஞ்சு+மஞ்சள்' அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை உட்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழைதான் பெரிய அளவில் மழையை கொடுக்கும். இத்துடன் புயல் ஏதும் உருவானால், அந்த ஆண்டு சென்னை வெள்ளக்காடாக மாறிவிடும். ஆனால் இது எல்லாம் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் நடக்கும். இந்த முறை அக்டோபர் மாதத்திலேயே வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

தற்போது மழை ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது, இரவு 7 மணி வரை சென்னை உட்பட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது திருவள்ளூர், கோவை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் காய்கறிகளை வாங்கி குவித்தனர். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, வெள்ளம் வந்துவிடுமோ என்று பயந்த மக்கள், தங்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்திக்கொண்டனர். ஆனால், மழை அந்த அளவுக்கு பெய்யவில்லை. காலையில் கொஞ்சம் தூறல் போட்டது. மாலையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையிலிருந்து 280 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications