வங்கக் கடலில் மாற்றம்.. 10 மாவட்டத்தில் இன்று பொளக்க போகுது மழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் விடுத்துள்ளது.. அத்துடன் நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழை இருக்கு: இந்த நிலையில், வரும் 15ம் தேதி தமிழகத்துக்கு நல்ல மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்தவாறே உள்ளது. நேற்றைய தினமும் அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது.
அதில், தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஆகஸ்ட் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஆகஸ்ட் 18 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை: இதில் ஆகஸ்ட் 13,14 தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இன்று ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் , நாளைய தினம் திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி: ஆகஸ்ட் 15ம் தேதி, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஆக.16-இல் வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் , சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஆக.13,14-ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.. தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் வேலூா் மாவட்டம் காட்பாடியில் தலா 140 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், விழுப்புரம் - 130 மிமீ, நெடுங்கல் (கிருஷ்ணகிரி) - 120மிமீ, பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) 110 மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் : மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மீண்டும் அறிவித்திருக்கிறது.
கனமழை: குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications