40 மணி நேரமாக கரென்ட் கட்! குடிநீர் இல்லை.. பள்ளிக்கரணையில் 4 அடிக்கு வெள்ளம்.. உதவி கேட்கும் மக்கள்
சென்னை: 40 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிக்கியிருப்பதாக பள்ளிக்கரணை குடியிருப்புவாசிகள் உதவி கேட்டு புகைப்படம் அனுப்பியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வடதமிழகம் வழியாக ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்தது. இந்த நிலையில் வடதமிழகமான சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகே புயல் நகர்ந்து சென்றதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மிக கனமழை பெய்தது.

நேற்று காலை சென்னைக்கு 100 கி.மீ. தொலைவில் புயல் இருந்த நிலையில் பயங்கர காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேய் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளிலிருந்து தண்ணீர் 4 அல்லது 5 அடிக்கு தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். பலர் மாடிகளில் தஞ்சமடைந்தனர். ஆனாலும் அங்கு கடுங்குளிரால் அவதிப்பட்டனர்.
மின்சாரம் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மருந்து மாத்திரை இல்லாமல் இணை நோய் உள்ளவர்களும் வயதானவர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல இடங்களில் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பள்ளிக்கரணை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏதோ பேப்பர் கப்பல் போல் கார்கள் தண்ணீரில் அடித்துச் சென்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளத்திற்கு வரை வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ராம் நகர் தெற்கு விரிவாக்கம் பகுதியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
அந்த வீடுகளில் இருப்போருக்கு 40 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கு மேல் குடிக்கத் தண்ணீர் இல்லாத சூழல் நிலவுகிறது. அவர்களிடம் இருக்கும் பவர் பேங்கும் விரைவில் பேட்டரி தீர்ந்துவிடும். தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி தங்களை மீட்குமாறு உதவி கேட்டு புகைப்படம் அனுப்பியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications